Tamilnadu

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் பலி!

சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் எஸ்.எஸ்.ஐ-யான பால்துரையும் ஒருவர். மதுரை சிறையில் இருக்கும் பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில், தன் கணவர் பால்துரையின் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில், “என் கணவர் தட்டார்மடத்திலிருந்து சாத்தான்குளத்துக்கு ஒரு வாரம் மட்டும் மாற்றப்பட்டார். அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாத்தான்குளம் வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத என் கணவரை பழி வாங்குகிறார்கள்.

எங்கள் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அதனால், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் உயிருக்கு எதாவது ஆகிவிடும்'' எனக் கூறியிருந்தார்.

ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக கூறி வந்த நிலையில் மதுரை மாநகர போலிஸ்கமிஷனரிடமும் புகார் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலைஎஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது எஸ்.எஸ்.ஐ பால்துரையின் உடல் கொரோனா சிறப்பு வார்டில் இருந்து போலிஸ் பாதுகாப்புடன் அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சரியான சிகிச்சை இல்லாததே கணவன் இறப்புக்கு காரணம் பால்துரையின் மனைவி குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி மங்கையர்திலகம், மற்றும் மகன் பிரவான் கூறும்போது, “இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாமல் என் கணவரை திட்டமிட்டு போலிஸார் சேர்த்துள்ளனர்.

இந்த மன அழுத்தத்தின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். அதேபோல் சர்க்கரை அளவு அதிகரித்து காணப்பட்டிருந்தது. அவருக்கு தொடர்ந்து முறையான சிகிச்சை அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், கொரோனா இருப்பதாக காரணம் காட்டி உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது கணவர் இறந்து விட்டார். உரிய சிகிச்சை அளித்திருந்தால் தனது கணவரை காப்பாற்றியிருக்க முடியும். மேலும் தனது கணவரின் உடல் எங்களின் சொந்த ஊரில் கொண்டுசென்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

Also Read: நிலச்சரிவில் தமிழர்கள் பலி: “மீட்புப்பணிகளை தீவிரப்படுத்துக; இழப்பீடு வழங்குக”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!