Tamilnadu

“புரட்டிப்போடும் கனமழை.. ஸ்தம்பித்தது நீலகிரி”: ரெட் அலர்ட் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க அரசு!

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை, சற்று தாமதமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக வரலாறு காணாத காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இதனால் உதகை, பைக்காரா, நடுவட்டம், அப்பர் பவானி, அவலாஞ்சி உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் நேற்று இருவர் பலியாகிய நிலையில், ஒரு காவலர், ஒரு தூய்மை பணியாளர் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்சார கம்பிகள் மீது மரங்கள் விழுந்த நிலையில் போதுமான மின்துறை ஊழியர்கள் இல்லாததால், மின்சாரத்தை சரி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை, குந்தா, கூடலூர், நடுவட்டம் ஆகிய நான்கு தாலுகாக்கள் மூன்றாவது நாளாக இருளில் தத்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்கூட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, அபாயகரமான பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், கூடலூரில் தற்போது பெய்து வரும் மழையால் தற்போதும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நீலகிரியில் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் மூன்று அணைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read: விடிய விடிய கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை!