Tamilnadu

வீடு வாடகைக்கு தேடிய நபரை ஏமாற்றிய கும்பல் - பழிவாங்க குற்றச்செயலில் ஈடுபட்ட கிராபிக்ஸ் டிசைனர் கைது !

சென்னை பள்ளிகரணை, வேளச்சேரி பிரதான சாலையில் வசித்து வருபவர் வெங்கடேஷ். கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் வீடு தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், வீடு வாடைக்கு பிடித்து தரும்படி, விளம்பர நிறுவனமான சுலைக்கா என்ற ஆன்லைன் நிறுவனத்தை கடந்த 1ம் தேதி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த ஆன்லைன் நிறுவன மூலம் ஒரு நபரின் எண் கிடைக்க, அவருடன் பேசியதில் தான் நவின் என்றும் வீடு காட்ட ஆள் அனுப்பி வைப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளார்.

அப்போது, மகேஷ் என்ற நபர் வந்து 4,000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், வீடு வாடகைக்கு பார்த்து கொடுக்கவில்லை. பின்னர் தொடர்பு கொண்டால் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் பறிபோன பணத்தை மீட்க எண்ணி, தனது நணபர்கள் மூலம் வீடு வாடகைக்கு தேவை என்பது போல் பேசி மகேஷை தரமணி எம்.ஜி.ஆர்.சாலை அருகே வரவழைத்து அடித்து செல்போன், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பிடிங்கி சென்றனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட கண்ணகி நகரை சேர்ந்த மகேஷ் என்பவர் தரமணி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வெங்கடேஷ், சதீஷ், ஸ்விக்கியில் பணிபுரியும் பரத்(30) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

விசாரணையில் 4,000 ரூபாயை இழந்த காரணத்தால் பழிவாங்கும் நோக்கத்தோடு பிடிங்கிச் சென்றதாகவும், தாங்கள் வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை எனவும் போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, இரு தரப்பிலும் புகாரை பெற்று இரண்டு வழக்குகள் பதிவு செய்து ஏமாற்றிய வழக்கில் மகேஷையும், வழிப்பறி வழக்கில் வெங்கடேஷ் உட்பட மூன்று பேர் என நான்கு பேரையும் கைது செய்த தரமணி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். வீடு வாடகைக்கு தேடிய நபர் சில மோசடி பேர்வழிகளால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்தி கொலை; புதுச்சேரியில் பயங்கரம்