Tamilnadu

“காவிக்கும்பலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை”:கிஷோர் கே சாமி விவகாரத்தால் கொதிக்கும் பெண்கள் இயக்கம்!

ஊடகத்துறை பெண்களை, பெண் செயல்பாட்டாளர்களை சமூக ஊடகத்தில் தரக்குறைவாக பேசுகிற கிஷோர் கே சாமி யை உடனடியாக கைது செய்து சிறையில் அடைவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பெண்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பெண்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிஷோர் கே சாமி என்ற நபர் சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை 29.07.2020 அன்று வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

இதை தாங்க முடியாத பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி போன்றோர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து கிஷோர் கே சாமி யை விடுதலை செய்துள்ளதாக தெரிகிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட குற்றவாளிகள் அ.தி.மு.க பின்னணி கொண்டவர்கள் என்பதும், 29.07.2020 அன்று நாகர்கோயில் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்திரபிரதேசம் உன்னவோ பகுதியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் வழக்கு மற்றும் ஜம்மு முஸ்லீம் பழங்குடி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற குற்றத்திற்கு ஆதரவாக ஜம்மு பா.ஜ.கவினர் நடத்திய போராட்டம். ஜம்மு பா.ஜ.க ஆதரவு வழக்கறிஞர் சங்கம் வழக்கை நடத்த விடாமல் செய்த அடாவடித்தனங்கள். தமிழகத்தில் ஊடக துறை பெண்கள் மீது நடிகர் எஸ்.வி. சேகரின் பாலியல் வன்முறையான பேச்சுக்கள்.

இந்திய அளவில் பா.ஜ.கவும் தமிழக அளவில் அ.தி.மு.க வும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை, பாலியல் குற்றவாளிகளை, பெண்களின் மாண்பை இழிவு படுத்தும் பேச்சுக்களை ஆதரிக்கும்/அடைக்கலம் தரும் கட்சிகளாக இருப்பது அவர்களின் கடந்த கால செயல்பாடுகளில் இருந்து தெரிகிறது. பா.ஜ.கவும் அ.தி.மு.க வும் பெண்களின் நலனுக்கு பாதுகாப்புக்கு எதிரான கட்சிகளாக இருக்கின்றன என்று கூறுகிறோம்.

பெண்களை தரக்குறையாக பேசும் கிஷோர் கே சாமி என்ற நபரை பிணையில் விடுவிக்க அழுத்தம் கொடுத்த அ.தி.மு.க அமைச்சர்களை வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகருக்கு கிஷோர் கே சாமிக்கு ஆதரவாக தமிழக காவல் துறையை கடமையை செய்ய விடாமல் ஆட்டுவிக்கிற தமிழக பா.ஜ.கவையும் அதன் தேசிய செயலர் எச்.ராஜாவையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே தமிழக அரசு ஊடகத்துறை பெண்களை, பெண் செயல்பாட்டாளர்களை சமூக ஊடகத்தில் தரக்குறைவாக பேசுகிற கிஷோர் கே சாமி யை உடனடியாக கைது செய்து சிறையில் அடைவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு” - அ.தி.மு.க பிரமுகர் அலுவலகத்தில் வைத்து கிஷோர் கே சுவாமி கைது !