Tamilnadu

ஆம்புலன்ஸ் வராததால் வீதியில் காத்திருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் - அரசு நிர்வாகத்தின் அலட்சியம்!

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த 46 வயதுடைய நபருக்கு உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த சுகாதாரத் துறையினர், சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு தற்போது ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வராததால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஊர் பொதுமக்கள் நோய் பரவும் அச்சத்தால் அவர்களை எதிர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதாக நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் தெரிவித்த சுகாதாரத் துறையினர் கொடுவிலார்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட நபரை கண்ட ஊர்ப் பொதுமக்கள் அவரை விரட்டியதாகக் கூறப்படுகிறது. பேருந்து நிறுத்தத்திற்கு வந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மற்றும் சுகாதாரத் துறையினர் தொற்றால் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகே பாதுகாப்பாக வைத்தனர்.

ஆனாலும் பல மணி நேரமாக காத்திருந்தும் ஆம்புலன்ஸ் ஏதும் வராததால், ஊர் மக்களே வாடகை ஆட்டோவில் ஏற்றி கொடுவிலார்பட்டி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதில் காலதாமதம் செய்த சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Also Read: சாத்தான்குளம் தந்தை - மகன் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!