Tamilnadu

“மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை” : இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கன்னி பகுதியை சேர்ந்த மாயவனின் மகன் சதீஷ் குமார்(21). இவர் நேற்று மதியம் 2 மணியளவில் அவரது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், குழந்தையின் அழுகுரல் கேட்கவே விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. குழந்தையை மீட்ட பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் குற்றவாளி சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி சிறுமிக்கு நடந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “ஊரடங்கால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரிப்பு” : 11 நாளில் 92 ஆயிரம் புகார் அழைப்பு!