Tamilnadu

நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்... ஆனால் சென்னைக்கு? - தமிழகத்தின் வானிலை நிலவரம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி தேவாலா, திருப்பூர் குந்தலம், விருதுநகர் ராஜபாளையத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், தேனி உத்தமபாளையத்தில் 4 சென்டிமீட்டர் மழையும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 23 முதல் ஜுன் 27 ஆம் தேதி வரை, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு, லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீன்பிடித்த மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.