Tamilnadu

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க விஷமிகள் திட்டம் - தி.மு.க MLA கண்டனம்

கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலை மீது காவி சாயம் பூசி, அவமதித்த சமூக விரோத அமைப்புகளை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என கோவை மாநகர தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இன்று 17.07.2020 , அதிகாலை, கோவை சுந்தராபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலை மீது காவி சாயம் பூசி, பெரியார் சிலையை அவமதித்துள்ள சமூக விரோத செயலுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில சமூக விரோதிகள் , பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வி‌ஷமத்தனமாகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

தன் வாழ்நாளிலேயே இது போன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி, எதிரிகளைப் பொடிப் பொடியாக்கியவர் தந்தை பெரியார். கடலூரில் அவர் மீது செருப்பு வீசப்பட்ட இடத்திலேயே பின்னர் அவருக்கு சிலை வைக்கப்பட்டு, அவர் முன்னிலையிலேயே அதனைத் தலைவர் கலைஞர் திறந்து வைத்தார் என்பது வரலாறு.

அந்த வரலாறு அறியாத மூடர்கள், திராவிட இயக்கத்தால் தமிழ்நாடு கண்டுள்ள சமுதாயப் புரட்சியை செரிமானம் செய்ய முடியாத சமூக விரோதிகள். இத்தகைய நிகழ்வுகளின் மூலம் தந்தை பெரியாரின் புகழை இம்மியளவும் குலைக்க முடியாது. அதே நேரத்தில் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

எனவே, தந்தை பெரியார் சிலையை அவமதித்து , அதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கத் திட்டமிட்டவர்கள் மீதும், அதற்கு தூண்டியவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கையை அதிமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "மின் கட்டண குறைப்பு போராட்டம் - இரக்கமற்ற அ.தி.மு.க அரசை தட்டி எழுப்புவோம்" - கார்த்திக் எம்.எல்.ஏ