Tamilnadu

“நாளை கடைசி நாள்; இல்லையேல் இணைப்பு துண்டிக்கப்படும்”: மின்வாரியம் திடீா் அறிவிப்பு - பொதுமக்கள் கலக்கம்!

சென்னை புறநகா் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூா், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீட்டு மின்சார உபயோகிப்பாளா்களுக்கு நேற்று மாலை செல்போன்களில், மின்சார வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதில் தங்களுடைய வீடுகளுக்கான மின்சார கட்டணத்தை இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் (நாளைக்குள்) கட்டிவிட வேண்டும். இல்லையேல் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மின்இணைப்பு துண்டிப்பை தவிா்க்க உடனே மின்கட்டணத்தை செலுத்துங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஏற்கனவே மின்சார கட்டணத்தை செலுத்தியவா்களுக்கும் வந்துள்ளது. இதனால் புறநகரில் வீட்டு மின்சாரம் உபயோகிப்பாளா்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மின்சாரக்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்ற குற்றசாட்டு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இதுபற்றி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. தமிழக மின்துறை அமைச்சா் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மின்கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மின்இணைப்பு துண்டிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்திருந்தாா்.

அவைகளயெல்லாம் மீறி, மின்சார வாரியம் தன்னிச்சையாக இந்த திடீா் அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை புறநகா் பகுதி மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி புறநகரில் உள்ள மின்சார வாரிய அதிகாரிகளை கேட்டபோது, உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில் தான் இந்த குறுஞ்செய்தி மின்சாரம் உபயோகிப்பாளா்களின் செல்போன்களுக்கு அனுப்பப்படுகிறது என்று கூறுகின்றனா்.

Also Read: கொரோனா துயரம் : மின் கட்டணத் தொகையில் 50% மானியம் அறிவித்த கேரள அரசு - திருந்துமா தமிழக அரசு ?