Tamilnadu

“தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை” : வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை மற்றும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது, தமிழகத்தின் வளி மண்டல மேலடுக்கில் நிலவுவதன் காரணமாக பல பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கோவை, நீலகிரி, தர்மபுரி திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வடக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள், கடலோர கர்நாடகா மற்றும் லட்சதீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: “பேரிடரில் கூட சம்பளம் வழங்க மறுப்பதா?” : பா.ஜ.க அரசுக்கு எதிராக பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!