Tamilnadu

தீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

விருத்தாச்சலம் தொகுதி முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில், " விருத்தாசலம் முன்னாள் கழக சட்டமன்ற உறுப்பினரும், கழக தீர்மானக்குழு உறுப்பினருமான திரு குழந்தை தமிழரசன் திடீரென மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும், பெரும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு, பல்வேறு கழகப் பொறுப்புகளிலும் கட்சிப் பணியாற்றி- பட்டி தொட்டிகளில் எல்லாம் கழகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தந்தவர். கழக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய நேரத்தில் தொகுதி மக்களின் குரலாகவும், அவர்களுக்கான நலத் திட்டங்களைப் பெற்று நிறைவேற்றிக் கொடுக்கும் பொது நல ஊழியராகவும் திகழ்ந்தவர். முத்தமிழறிஞர் கலைஞரிடமும், என்னிடமும் பிரியாப் பேரன்பு கொண்ட அவர், கழகம் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று கழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

கழகத்தின் தீரமிகு கொள்கை வீரர்களில் ஒருவரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன். எனக்கும், கழகத் தோழர்களுக்கும், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும் அவரது மறைவு பேரிழப்பாகும்.

திரு. குழந்தை தமிழரசனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.