Tamilnadu

“எனது ‘இளைய சூரியன்’ பத்திரிகையில் எழுதியவர்”- மூத்த பத்திரிகையாளர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.பி. திருஞானம் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “மூத்த பத்திரிக்கையாளர் எம்.பி.திருஞானம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் ஷ்யாம் அவர்களின் 'தராசு' புலனாய்வு வார இதழில் முதன் முதலில் தனது எழுத்துப் பணியைத் துவங்கிய அவர் அனைத்து அரசியல் தலைவர்களாலும் அறியப்பட்டவர். வாசகர்களைக் கவரும் கட்டுரைகளை எழுதும் கலையை தன்னகத்தே கொண்டிருந்த அவர், சொந்தமாகவும் பத்திரிகை நடத்தியவர்.

நான் நடத்திய 'இளைய சூரியன்' பத்திரிகையில் கட்டுரை எழுதிய அவர், எனக்கு மிக நெருங்கிய நண்பராகவும் - பத்திரிகையுலக நண்பர்களின் பாசத்திற்குரியவராகவும் திகழ்ந்தவர்.

எம்.பி.திருஞானம் அவர்களின் மறைவு பத்திரிகையுலகத்திற்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பத்திரிகைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.