Tamilnadu

“தலித் பஞ்சாயத்து தலைவரை செயல்பட விடாமல் அச்சுறுத்தும் ஆளுங்கட்சியினர், அதிகாரிகள்” - அதிர்ச்சி சம்பவம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களை மக்கள் பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆளுங்கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகளால், ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக வேதனையுடன் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரிகள், குளங்களில் இருந்து விவசாயிகள் களிமண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து குளங்களில் ஆளுங்கட்சியினர் மண்ணெடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் காரிக்கோட்டை , பைங்காநாடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு வகிப்பதால் ஒன்றிய நிதியிலிருந்து எந்தப் பணியும் வழங்காமல் அவர்களை அலைக்கழித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள காரிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்செல்வம், “மக்கள் பணிகளைச் செய்ய விடாமல் ஆளுங்கட்சியினரும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் தடுத்து வருகின்றனர்.

தற்போது எனது ஊராட்சியில் குளத்தில் குடிமராமத்து பணி நடைபெறுகிறது. இப்பணி கூட எனக்குத் தெரியப்படுத்தப் படாமல் நடக்கிறது. பஞ்சயத்துராஜ் சட்ட விதிகளை மீறும் வகையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செயல்படுகின்றனர். இவர்களால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக எனது ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை” எனத் தெரிவித்துள்ளார்.