Tamilnadu

“மகப்பேறு காலத்தில் மனைவியுடன் இருக்க முடியவில்லை” - ஊரடங்கால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை!

மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்க முடியவில்லை என்ற விரக்தியில் காஞ்சிபுரம் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனத்தில் தினக்கூலியாகப் பணிபுரிந்து வருகிறார்.

விக்னேஷ்வரன், கடந்த 2019 ஜூன் மாதம் சென்னையைச் சேர்ந்த ரோஜா என்பவரைத் திருமணம் செய்து இருந்து காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவி மகப்பேறுக்காக சென்னை சென்ற நிலையில் இன்னும் ஓரிரு நாளில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவால் சென்னை செல்ல முடியவில்லை என விரக்தியடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது நண்பர் அவரை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது தூக்கில் தூக்கிய அவரை இறக்கி பரிசோதித்ததில் அவர் இறந்தது உறுதி ஆனது. இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவ காஞ்சி காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மகப்பேறின்போது மனதளவில் தைரியம் கொடுக்க தனது கணவன் உடன் இருக்க எப்போதும் விரும்பும் மனைவியின் ஆசையை நிறைவேற்ற இயலாமயை எண்ணி கணவன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: "நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள்.. மக்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டும்” - பிரதமர் மோடி உரை!