Tamilnadu

“இந்துத்வ அமைப்புகள் மிரட்டல்” - போலிஸாருக்கு பால் விநியோகம் இல்லை என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட காரணம்!?

சாத்தான்குளத்தில் போலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறையிலே மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தமிழகமெங்கும் பரபரப்பைக் கிளப்பியது.

போலிஸாரால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் எதிக்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. போலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் கிளர்ந்தெழுந்தனர்.

இந்நிலையில், பால் முகவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனத் தொடர்ந்து பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்துவருவதால், காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை எனக் கடந்த வெள்ளிக்கிழமையன்று பால் முகவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தங்களது அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது பால் முகவர்கள் சங்கம். இதுகுறித்துப் பேசியுள்ள பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, “பால் முகவர்களுக்கு காவல்துறையினர் கொடுத்த தொல்லைகள் குறித்து அனைத்து மட்டத்திலும் புகார் அளித்தும் நடவடிகை எடுக்கப்படாததால் தான் வேறு வழியின்றி ‘போலிஸார் வீடுகளுக்கு பால் விநியோகிக்கப்படாது’ எனும் முடிவை எடுத்தோம்.

சில இந்துத்வ அமைப்புகள் எங்களை தொலைபேசியில் அழைத்து இதுதொடர்பாக மிரட்டியதோடு, சமூக வலைதளங்களிலும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளோடு பால் முகவர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதில், பால் முகவர்களுக்கு போலிஸார் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படும் என உறுதியளித்துள்ளனர். எனவே, இந்த புறக்கணிப்பு முடிவைக் கைவிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சாத்தான்குளம் இரட்டை கொலை: “அதிகார வன்முறைகளுக்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும்” - நடிகர் சூர்யா அறிக்கை!