Tamilnadu

“உதவி ஆணையாளருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு? : பின்னே இருக்கும் மர்மம் என்ன?” - தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி!

“கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி அவர்களுக்கு தொடர்ந்து 3வது ஆண்டாக பணி நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகின்ற தகவல்களுக்கு, இன்று வரை கோவை மாநகராட்சி ஆணையாளர் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?” என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பிலிருக்கும் ரவி, கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இந்த பதவியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஏற்கனவே கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் இரண்டு முறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஜூன் 30 அன்று ஓய்வு பெறவிருக்கும் உதவி ஆணையாளருக்கு மீண்டும் 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

ஆனால் இந்த பணி நீட்டிப்பு சம்பந்தமாக இன்று வரை கோவை மாநகராட்சி ஆணையாளர் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்? தெற்கு மண்டலத்திற்கு புதிய உதவி ஆணையாளர் தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளாரா? அல்லது தற்போதைய உதவி ஆணையாளருக்கே மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதா ? என்ற கேள்விக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியில் தகுதியும் , அனுபவமும் , திறமையும் , சீனியாரிட்டியும் கொண்ட அதிகாரிகள் பலர் இருந்தாலும் , பணி ஓய்வு பெற்ற ஒருவருக்கு 3 வருடங்கள் தொடர்ச்சியாக பணி நீட்டிப்பு செய்யப்படுவதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பேற்க தற்பொழுது பதவியில் உள்ள அதிகாரிகள் ஒருவர் கூட இல்லையா? அல்லது நியமிக்க மனம் இல்லையா?

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு , அரசு பதவியில் இருக்கும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் , அறிவிக்கப்படாத அ.தி.மு.க கட்சி நிர்வாகி போல, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டளைகளை மட்டும் சிரமேற்கொண்டு, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகின்ற அனைத்து முறைகேடான ஒப்பந்தங்களுக்கும், விசுவாசமாக உடன் நின்று துணை போனதால், 3வது வருடமாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதா?

தெற்கு மண்டல அலுவலகம் புதிதாக கட்டியது, தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்தது, ஒப்பந்த பணிகள் ஒதுக்கீடு செய்தது போன்றவற்றில் உதவி ஆணையர் ரவி அவர்களுக்கு பெரும் அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தெற்கு மண்டல பகுதியில் நடந்த பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு தகவல்கள் முறையாக வழங்கப்படவில்லை. வேறு எந்த மண்டலங்களிலும் இல்லாத வகையில் இந்த மண்டலத்திற்கு மட்டும் ஓய்வு பெற்ற ஒருவரை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பணி நீட்டிப்பு செய்ய தீவிரம் காட்டுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளையும், மக்களைப் பற்றி நினைக்காத, மக்களின் நலனைப் புறக்கணித்த, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்காத ஆட்சி நடைபெறுவதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் கேலிக்கூத்தாக உள்ள இதுபோன்ற நிகழ்வுகளையும், தமக்கு ஆமாம் சாமி போடுபவர்களை மட்டும் நியமிப்பதையும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.