Tamilnadu

“காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும்” : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வீடியோ கான்பரன்சில் நேரில் ஆஜரானார்.

அப்போது, இருவர் உடல் பரிசோதனை சம்பந்தமான அறிக்கை தயாராக இருப்பதாகவும், சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய முடியவில்லை எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கல் செய்கிறோம் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசு சார்பாக கூறுகையில், டிஜிபி மற்றும் தமிழக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு போலிஸாருக்கான வழிமுறைகளை விரைவில் பிறப்பிக்க உள்ளதாகவும் எடுத்துரைத்தனர். வாதங்களை கருத்துக்களை கேட்டறிந்த நீதிபதி, தற்போது காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். இவர்களுக்கு போதிய மனநல ஆலோசனை வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும்.

கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி ராஜாசிங் என்பவர் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை செய்து முழுமையான அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.

நடுவண் நீதிமன்ற நீதிபதி விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், நீதிமன்ற விசாரணைகளை குறைவாக யாரும் எடை போடவேண்டாம் எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Also Read: ‘உயிரைப் பணயம் வைத்து களத்தில் நிற்பவர்களுக்கும் இவர்களால் களங்கம்’ - காவல்துறை அதிகாரிகள் வருத்தம்!