File image
Tamilnadu

“கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராவிட்டால் சஸ்பெண்ட்” - பள்ளி ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கொரோனா கணக்கெடுப்பு களப் பணியில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் கொரானா மீட்புப் பணிக்காக வந்து பணியாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் கொரோனா கணக்கெடுப்புப் பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பால் பெரும்பான்மையான வயது முதிர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகரில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குடும்பத்தார் ஏறக்குறைய 10 பேர் கொரோனா நோயால் மரணம் அடைந்துள்ளனர்.

இதை மறைத்துவிட்டு தமிழக அரசு அவர்கள் எல்லாம் கல்லீரல், கணையம், சிறுநீரக பாதிப்பால் இறந்ததாக மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துக் கொண்டிருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பணியிடை நீக்கம் எனும் மிரட்டலுக்கு அஞ்சி பலரும் விருப்பமின்றி கொரோனா கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு ஆசிரியர்களைக் காக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

Also Read: “நீட் தேர்வை கைவிட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையை நடத்துக” - கி.வீரமணி வலியுறுத்தல்!