Tamilnadu

''சினிமா தொழில் முடக்கத்தால் மளிகை கடை திறந்த திரைப்பட இயக்குநர்''-கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு!

கொரோனா ஊரடங்கினால் சினிமா தொழில் நசிந்துள்ளது. அத்துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்களை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு மழை நான்கு சாரல், பாரதிபுரம், நானும் பேய்தான், மவுனமழை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் என்பவர் தற்போது சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடையைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சினிமா இயக்குநர் ஆனந்த் கூறுகையில், “கொரோனாவால் 3 மாதங்களாக சினிமா தொழில் இல்லை. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என்று முடிவு எடுத்து நண்பர் ஒருவரின் இடத்தை வாடகைக்கு வாங்கி மளிகை கடை திறந்துள்ளேன். இங்கு குறைந்த விலைக்கு தரமான பொருட்களை விற்கிறேன்.

இந்த கொரோனா கஷ்டத்தில் மக்களுக்கு ஒரு சேவையாக இந்த தொழிலை செய்கிறேன். படப்பிடிப்பு தொடங்கியதும் நான் இயக்கி வரும் துணிந்து செய் படவேலைகளை கவனிக்க மீண்டும் சினிமா தொழிலுக்கு சென்று விடுவேன். அப்போதும் இந்த கடையை மூடமாட்டேன். வேறு ஒருவரை வேலைக்கு வைத்து கடையை நடத்துவேன்” என்று கூறினார்.

கொரோனா ஊரடங்கு பாதிப்பால் பிரபல இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்யத் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.