Tamilnadu

இன்று மட்டும் தமிழகத்தில் 44 பேர் கொரோனாவுக்கு பலி; 1843 பேர் புதிதாக பாதிப்பு- ‘அபாய’கட்டத்தில் சென்னை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 54 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று வரை தமிழகத்தில் 7,29,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். இதில் 32 பேர் அரசு மருத்துவமனையிலும், 12 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 797 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 25,344 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 20,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Also Read: “கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது; சென்னையில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்” - மருத்துவக் குழு பரிந்துரை!