Tamilnadu

ஹோட்டலில் கூட்டம் கூட்டிய அதிமுக அமைச்சர்: ஊரடங்கை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்த உதயகுமார் மீது புகார்!

கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மேன்மேலும் பாதிப்பை உண்டாக்கி வரும் அதிமுக அரசு, மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரில் தனிமனித இடைவெளி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவுக்கு அதிமுகவினரும், அதன் அமைச்சர்களும் ஊரடங்கு தொடங்கிய காலம் தொட்டு செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தனியார் ஹோட்டலை தடையை மீறி திறந்து அதிமுக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக நிர்வாகிகள் அழைத்து வரப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏசி அறைக்குள் சந்திப்பு நடைபெற்றது.

மேலும் மத்திய மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட ஹோட்டல்களை திறந்து தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அமைச்சரின் இந்த நிர்வாகிகள் சந்திப்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் நோய்த்தொற்றை உருவாக்கும் வகையில் பத்திரிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கொடுக்காமல் தனது விளம்பரத்துக்காக பயன்படுத்திக்கொண்டது பெரும் கவலை அளிக்கிறது என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 144 தடை உத்தரவை மீறியதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: “பந்தாவுக்காக நிவாரண நிகழ்ச்சியை விழாவாக மாற்றிய அ.தி.மு.க அமைச்சர்” : தனிமனித இடைவெளி காணாமல் போன அவலம்!