Tamilnadu

“எண்ணெய் டின்னில் பறவைக்கு உணவும் நீரும் வைத்து அசத்தல்” - நெல்லை சப்-கலெக்டருக்கு குவியும் பாராட்டு!

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்தாண்டு கோடை வெயிலும் வாட்டி வதக்கிறது, சுட்டெரிக்கும் கோடைக்கால வெயிலை எதிர்கொள்ள முடியாமல் மனிதர்களே திணறும் வேளையில் உயிரினங்களின் நிலை கேள்விக்குறியே.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள், விலங்குநல ஆர்வலர்கள் எனப் பலரும் கோடை வெயிலில் இருந்து பறவைகள் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பில் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சிவகுரு இயற்கை மற்றும் பறவைகள் நல ஆர்வலராக இருந்துவருகிறார்.

இதனிடையே கோடைக்காலம் துவங்கி வெயில் வாட்டி வதைப்பதால் இந்தச் சூழலை பறவைகள் எதிர்கொள்ளும் விதமாக பறவைகள் குடிப்பதற்காக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த எண்ணெய் டின்களை கொண்டு பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார் சிவகுரு.

அப்படி வடிவமைக்கப்பட்ட எண்ணெய் டின்னில் தானியம் மற்றும் தண்ணீர் நிரப்பி வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களில் கட்டித் தொங்கவிட்டுள்ளார். அதில் உள்ள தானியத்தை உண்பதற்கும் தண்ணீரைக் குடிப்பதற்காகவும் பறவைகளும் தினமும் வந்து செல்கின்றன. அவரின் இத்தகைய முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Also Read: “இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன?” - கி.வீரமணி அறிக்கை!