Tamilnadu

ஜூன் 1ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, கரூர், வேலூர்,திருப்பத்தூர், தரும்புரி, சேலம், திருச்சி மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனக் கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 7 செ.மீட்டர் மழையும், ஊத்துக்குளியில் 6 செ.மீட்டர் மழையும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா 4 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையானது 38 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்ப நிலையானது 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அதேபோல, லட்சத்தீவு மற்றும் மாலத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த இரு தினங்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்க்கடல் பகுதிகளுக்கு மே 31-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.