Tamilnadu

“பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்; ரோந்து போலிஸார் செய்த பெரும் உதவி”- சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹரீஸ். இவரது மனைவி சியாமளா நிறைமாத கர்ப்பிணி. இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளிவில் திடீரென சியாமளாவுக்கு பிரவச வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பதறிப்போன ஹரீஸ் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்ய முயற்சித்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக எந்த வாகனமும் வராத நிலையில் சியாமளா ஒருபக்கம் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

மகளின் அழுகையால் கலங்கிப் போன சியாமளாவின் தயார் தெருவிற்கு வந்து ஆட்டோ, டாக்ஸி ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துள்ளார். அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலிஸார் இந்த நேரத்தில் ஒரு பெண்மணி வருவதைக் கண்டு அவரிடம் விபரத்தைக் கேட்டறிந்தனர்.

பின்னர் உடனே உதவிக்குத் தயாரான ஆதம்பாக்கம் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் வள்ளி ஆகியோர் சியாமளாவின் வீட்டுக்குச் சென்று, அங்கு வலியால் துடித்த சியாமளாவை மீட்டு போலிஸ் வாகனத்திலேயே அழைத்துக்கொண்டு அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தாமதமின்றி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டதால் சிறிது நேரத்திலேயே சியாமளாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சரியான நேரத்தில் உதவி செய்த போலிஸாருக்கு சியாமளா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் காவல்துறைக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பட்டினி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி : “உயிரிழந்தது தெரியாமல் தாயை எழுப்பமுயன்ற குழந்தை”!