Tamilnadu

“தரமற்ற மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை” : அ.தி.மு.க அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த சென்னை ஐகோர்ட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரிகொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு ரசீதுகள் கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்கவேண்டும். அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும். விலை பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மதுபானங்கள் கொள்முதல் செய்யும்போது தரமானதாக இருக்கிறதா என்று அரசு சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா? இதற்கு ஆதாரம் உள்ளதா? இதுவரை எப்படி கொள்முதல் செய்தீர்கள்? என்று விளக்கம் அளிக்கவேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், அரசு நிர்ணயித்த MRP விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கும் போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா?

அதிக விலைக்கு விற்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக ஜூன் 25ம் தேதி அறிக்கை அளிக்கவேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: டாஸ்மாக் திறக்க அவசர வழக்குக் கோரிய அதிமுக அரசு.. நிவாரண நிதி கேட்ட வழக்கில் ஆஜராக மறுப்பு!