Tamilnadu

“எக்குத்தப்பாக எறிய மின் கட்டணம் - கோல்மால் செய்யும் மின் வாரியம்” : மதுரை மக்கள் அதிர்ச்சி!

கொரோனாவை காரணமாக வைத்து அரசு மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகிறது. குறிப்பாக மின்துறை கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கான மின் உபயோக கணக்கீட்டிற்காக ரீடிங் எடுக்க வரும் கணக்காளர்கள் அதற்கான அட்டையில் பயனீட்டு யூனிட் மற்றும் தொகையைக் குறிப்பிடுவதில்லை.

மாறாக குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டண வசூல் மையத்தில் சென்று மின் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லுகிறார்கள். அதன்படி மின்கட்டண வசூல் மையம் சென்றால் அதிர்ச்சியடையும் வகையில் மிரட்டுகிறார்கள்.

உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் மின் கட்டணம் ரூ.390, மார்ச் மாதம் ரூ.420 மின் கட்டணம் செலுத்திய நிலையில் இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2,200 செலுத்த வேண்டும் என அதிர்ச்சியூட்டும் தொகையை கூறியுள்ளார்கள்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “மின் கணக்கீட்டாளிடம் கடந்த ஒன்றரை வருடங்களாக அதிக பட்சம் ரூ.500 வரை செலுத்தியுள்ளேன். தற்போது எப்படி ரூ.2,200 என்று கேட்டால் அது தான் உங்களுக்கான மின் கட்டண தொகை என்று அதிரடியாக கூறுகிறார்.

தாங்கள் ரீடிங் எடுக்க வரும் போது ஏன் அட்டையில் பயனீட்டு அளவு மற்றும் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டால் மின் அட்டை மூலம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி விடுவாராம். அப்படியானால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குச் சென்று ரீடிங் எடுப்பதால் மட்டும் இவருக்கு கொரோனா தொற்று ஏற்படாதா? கொரோனாவை காரணமாக வைத்து மின்துறை நிர்வாகம் மக்களிடம் கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே இருப்பதனால் மின் கட்டணம் சற்று உயரலாம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் இப்படி 4 மடங்கு உயர்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. இவர்கள் மின் பயனீட்டு அட்டையில் கடந்த முறை எடுத்த ரீடிங், இந்த முறை உள்ள ரீடிங் இவற்றை கணக்கில் கொண்டு தான் பயனீட்டு அளவு, தொகை இவற்றை அட்டையில் குறிப்பிட வேண்டும். இவை எதையும் மேற்கொள்ளாமல் இவர்கள் சொல்லும் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறினால் எந்த அடிப்படையில் நியாயம்.

மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது தான் மக்களுக்கான அரசா? ஒருபுறம் வீடுகளுக்கான மின் உபயோகத்திற்கு முதல் 100 யூனிட்டுகள் இலவசம் என்று ஏமாற்றி மக்களிடமிருந்து பல ஆயிரம் பறிப்பது தான் இந்த அரசின் செயல்பாடா? கொரோனாவை காரணமாக சொல்லி கொள்ளையடிப்பது தான் அரசின் சாதனையா? அட்டையில் உள்ளபடி ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்ச தொகையே கடந்த மாதங்களில் வந்துள்ளது.

ஆனால் பெத்தானியாபுரம் பகுதியில் வில்லியம் என்பவருக்கு ரூ.4,800ம் சாரதாம்பாள் என்பவருக்கு 2,400ம் ராஜன் என்பவருக்கு மார்ச் ரூ. 420 மின்கட்டண தொகை தற்போது ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக போதிய வருமானமின்றி தவிக்கும் மக்கள் மீது தற்போது மின்சார கட்டணம் பேரிடியாக விழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மாநிலங்களின் நிதி ஆதாரத்தை தாராளமாக வழங்கிடுக.. இது வெறும் சலுகையோ நன்கொடையோ அல்ல; உரிமை!” - கி.வீரமணி