Tamilnadu

மதுக்கடைக்கு அனுமதி.. சமூக விலகளுடனான சிறப்பு தொழுகைக்கு மறுப்பு.. அதிமுக அரசால் இஸ்லாமியர்கள் அதிருப்தி!

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நான்காம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அவ்வகையில் அரசின் வருமானத்தை பெருக்குவதற்காக டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது. இதற்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தை உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்றது எடப்பாடி அரசு.

இந்த நிலையில், மே 25ம் தேதி இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அப்போது, பள்ளிவாசல்களில் தனிமனித இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை நடத்த 2 மணிநேரம் அனுமதிக்குமாறு திருவாரூரைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அனைத்து மத வழிபாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற நீதிபதிகள் குத்புதீனின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சமூக இடைவெளியே கடைபிடிக்காமல் டாஸ்மாக் கடைகளை திறந்து வைரஸ் பரவல் அதிகரிக்கும் வேளையில் உரிய தனிமனித பாதுகாப்புடன் தொழுகை நடத்த 2 மணிநேரம் அனுமதி கேட்டதற்கு மறுப்பு தெரிவித்தது இஸ்லாமியர்களிடையே வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Social Distance-ஐ காற்றில் பறக்கவிட்ட அதிமுக அமைச்சர்கள் - ஊரடங்கும், கட்டுப்பாடும் மக்களுக்கு மட்டுமா?