Tamilnadu

“மனைவியுடன் 4 மாதமாக பிரச்சனை : கூகுள் மீது நடவடிக்கை எடுங்க” - குடும்ப சிக்கலை விளைவித்த கூகுள் மேப்!?

மயிலாடுதுறை பாலக்கரை பகுதியில் ஜவுளிக் கடை நடத்திவருபவர் சந்திரசேகர். இவருக்கு திருமணமான பின்னர் கூகுளில் புதிதாக அறிமுகமான “கூகுள் யுவர் டைம்லைன்” என்ற வசதியை பயன்படுத்தி வந்துள்ளார்.

ஆரம்பத்தில் சென்றுவரும் இடங்களைப் பார்ப்பதற்காக பயன்பட்ட “கூகுள் யுவர் டைம்லைன்” இன்று பெரும் பிரச்னைக்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவருமே “கூகுள் யுவர் டைம்லைன்” வசதியை பயன்படுத்திய நிலையில் சந்திரசேகர் செல்லும் இடத்தை கூகுள் மேப் தவறுதலாகக் காட்டியுள்ளது.

இதனால் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படும் குடும்ப தகராறால் இருவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பின்னர் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறும் அளவிற்குச் சென்றும் கூட இருவரும் கூகுள் மேப் வசதியைக் கைவிடவில்லை.

இந்நிலையில் கூகுள் மேப்-பில் குறைபாடு இருப்பதாகவும், இதனால் மனைவிக்கும் தனக்கும் சண்டை ஏற்படுவதாகவும் அதனால் கூகுள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், கூகுள் தவறை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கோரி சந்திரசேகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை போலிஸார் இதுதொடர்பாக கணவன் - மனைவியிடம் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மது அருந்திவிட்டு தகராறு செய்த கணவன்” : மனைவி, மகள் தீக்குளிப்பு - டாஸ்மாக்கால் முதல்நாளே ஏற்பட்ட சோகம்!