Tamilnadu

“சொந்த ஊருக்குச் சென்றவர்களின் வீட்டில் திருட்டு” : ஊரடங்கில் நடந்த திடுக்கிடும் கொள்ளைச் சம்பவம்!

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்புக் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் திருட்டு கும்பலைச் சேர்ந்த பலர் தற்போது கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரனைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கோடம்பாக்கத்தில் போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அரசு ஊரடங்கு அமல்படுத்தியதால் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டத்திற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கடந்த 18ம் தேதி ஊருக்கு வந்த ராஜேஷ் தனது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பூஜை அறையிலிருந்த இரண்டு ஜோடி வெள்ளி விளக்குகள், விலை உயர்ந்த லேப்டாப் என திருடப்பட்டிருந்தன.

இதனையடுத்து பள்ளிக்கரனை காவல்நிலையத்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அப்போது சென்னையில் குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கண்ணப்பன்நகர், மேடவாக்கம், பெரும்பாக்கம் மற்றும் பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் இதேபோல் வெளி ஊர் சென்று திரும்பியவர்கள் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு லேப்டாப், கேமரா, வெள்ளி பொருள்கள், தங்க நகைகள், பைக் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்திய போலிஸார் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையடுக்கப்பட்ட வீட்டின் தெரு பக்கம் கொள்ளை சம்பவம் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு 3 பேர் அடிக்கடி வந்துச் சென்றுள்ளனர். அவர்கள் வந்துச் சென்ற பிறகே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

அதன்படி வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க உதவிய மூன்று சிறுவர்கள் உட்பட சரவணன், சங்கர் மற்றும் நாகு ஆகிய 6 பேரை போலிஸார் கைது செய்தனர். கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு பகுதிகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், லேப்டாப்கள், செல்போன்கள், 20 ஆயிரத்திற்கும் மேல் பணம் ஆகியவற்றை போலிஸார் கைப்பற்றினர். மேலும் அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பேரில் தற்போது சிறையில் அடைக்கப்படனர்.

Also Read: “மிகமோசமான அரசியல் செய்கிறது பா.ஜ.க அரசு” - புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் சச்சின் பைலட் தாக்கு!