Tamilnadu

நோய் பரவல் அதிகமுள்ள சென்னையில் எப்படி 10ம் வகுப்பு தேர்வை நடத்துவீர்கள்?- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகி மாரியப்பன், மாணவர் ஒருவரின் பெற்றோர் சேக் அப்துல்லா ஆகியோர் தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,பி.டி.ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம்தான் நடைபெறுகிறது, கல்லூரிகளில் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், ஆனால் பத்தாம் வகுப்பு தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளதாகவும் ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்தப்போகிறீர்கள்? வெளியிலிருந்து எப்படி வர முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, நோய்க் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உரிய பாதுகாப்புடன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள், 11 ம்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையையும் நீதிபதி 11ம் தேதிக்கு ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநல நோய் தாக்கும்” : மருத்துவ ஆய்வறிக்கை எச்சரிக்கை!