Tamilnadu

‘சாலையில் செல்லும்போது சுருண்டு விழுந்த வடமாநில இளைஞர்’ - பட்டினிக் கொடுமையால் உயிரிழந்த சோகம்!

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் 144 ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் சாரைசாரையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தும் சைக்கிள் மார்க்கமாகவும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பயணிக்கும் வடமாநில  இளைஞர்களை தமிழக ஆந்திர எல்லையான பனங்காடு பகுதியில் ஆந்திர போலிஸார் வரவிடாமல் தடுத்து நிறுத்தியும் தடியடி  நடத்தியும் அவர்களை தமிழகத்தை நோக்கி அனுப்பி வைக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை சென்னை போரூரில் இருந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து உணவில்லாமல் கவரப்பேட்டை பஜார் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது உடல் சோர்வு காணமாக  கடை அருகே மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உணவு தண்ணீர் அளிப்பதற்காக எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் உடல் அசைவு ஏதும் இல்லாததால் அருகே இருந்த மருத்துவரை அழைத்துக்கொண்டு பொதுமக்கள் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதை அறிந்த கவரப்பேட்டை போலிஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராம் திவாஸ் (44) என்பது தெரியவந்தது. கும்மிடிப்பூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பட்டினிக் கொடுமையால் இறந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மூன்று வெவ்வேறு விபத்துகளில் 16 பேர் பலி”: புலம்பெயர் தொழிலாளர்களை ஒழித்துகட்ட நினைக்கிறதா பா.ஜ.க ?