Tamilnadu
“கம்யூனிசக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவர் தோழர் கே.வரதராசன்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான தோழர் கே. வரதராசன் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி பின்வருமாறு:
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், தற்போது மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவருமான தோழர் திரு. கே.வரதராஜன் அவர்கள் கரூரில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரியக்கத்தில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் மறைந்திருக்கும் அவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். நெருக்கடி நிலையை எதிர்த்து - ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இரு வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தி - பிறகு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர். விவசாயிகள் மற்றும் - விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தோழர். தற்போதும் கூட, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருப்பவர்.
கம்யூனிசக் கொள்கையை இதயத்தில் ஏந்தி - ஏழை எளியவர்களுக்கும், விவசாயிகளுக்கும், வியர்வை சிந்திப் பாடுபடும் பாட்டாளி வர்க்கத்தினர்க்கும், தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டு, இன்முகத்துடன் பணியாற்றிய அவரது திடீர் மறைவு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!