Tamilnadu

ஆன்லைன் மது விற்பனையை ஏன் எதிர்க்கிறது எடப்பாடி அரசு - கமிஷன் அடிக்க முடியாத விரக்திதான் காரணமா ?

கொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும், வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்கின்றது. நிபந்தனைகளுடம் சில தொழில்களை நடத்திக்கொள்ள அனுமதி அளித்த அரசு, பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தியதோடு, மதுபானங்கள் விலை மற்றும் வரியும் உயர்த்தியது.

இதனிடையே மது விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்ததையடுத்து பல மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் மதுக் கடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னையை தவிர பிற மாவடங்களில் மதுக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது அ.தி.மு.க அரசு.

பின்னர், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், எந்த கடையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் அபாயம் ஏற்பட்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யக் ஏற்பாடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ”உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம்” என உத்தரவிட்டனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு வலுவான எதிர்ப்பு எழுந்தப் போதும் கூட வருவாயைக் காரணம் காட்டித் திறக்க நினைக்கும் தமிழக அரசு, மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கவேண்டிய நிதியை பெறாமல் மக்களை குடிகாரர்களாக்கி வருவாயை ஈடுசெய்யவேண்டுமா? என்று, சமூக ஆர்வலர்கள், பெண்கள் உட்பட பலர் கடும் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி ஆன்லைனில் விற்பனை செய்ய அரசு தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, டாஸ்மாக் விவகாரங்களில், ஹிப் பார் (எச்.ஐ.பி) என்ற பிண்டெக் நிறுவனம் மனு தாக்கல் ஒன்றை செய்தது. அந்த மனுவில், ஆன்லைனில் மதுபானங்களை சேவைகளை கட்டணமின்றி வழங்க உத்தரவாதம் அளிப்பதாகவும், ஆன்லைன் விற்பனைக்கு ஏற்கெனவே டாஸ்மாக்குடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயர் ரக மதுவிற்பனை செய்யும் எலைட் ஏற்கெனவே நகரின் பல்வேறு இடங்களில் ஹிப்பார் ஆப்ஸ் என்ற செயலி மூலம் ஆன்லையனில் விற்பனை செய்து வருகிறது. அந்த ஆன்லையன் விற்பனையில் எலைட் தவிர பிற டாஸ்மாக் கடைகளில் இந்த ஆப்ஸ் மூலம் மது வாங்க அனுமதியில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணம், டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் அதிக லாபம் அதாவது விலையைவிட அதிகமாக வசூலிகப்படும் கமிஷ்ன்தான். இந்த கமிஷ்ன் விவகாரத்தில் ஒரு டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு ரூ.10 முதல் 20 வரை கூடுதல் விலையை தினந்தோரும் சர்வ சாதரணமாக விற்கின்றனர். மதுகுடிப்போரும் கிடைத்தால் போதும் என விற்கப்படும் விலைக்கே வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஒரே நபருக்கு அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல் விற்கக்கூடாது என்று உத்தரவு இருந்தும் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

இந்நிலையில் ஆன்லைனில் மதுவிற்பனை செய்தால் அந்த வருமானம் கிடைக்காது; அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளில் உள்ள பார் வருமானமும் இல்லாமல் போய்விடும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலன ஆளும் கட்சியினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

பார்களுக்கு தற்போது அனுமதி இல்லாவிட்டாலும், மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலமாக கணக்கில் வராமல் சரக்கு வரவழைத்து விற்று லாபம் சம்பாதிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களுக்கு வருமானம் போகும் என்றால் விட்டுவிடுவார்களா என்ன? உச்சநீதிமன்றம் சென்றாவது தனது வசூல்வேட்டையை நடத்ததான் போகிறார்கள் என பலரும் விமர்சித்துள்ளனர்.

Also Read: “குடிபோதையில் தகராறு” : ஒன்றாக சுற்றிய நண்பனைக் கொன்ற இளைஞர் - உயிரைப் பறித்த டாஸ்மாக் திறப்பு!