Tamilnadu

“பொள்ளாச்சி, நாகர்கோவிலை தொடர்ந்து மதுரையில் பயங்கரம்” - மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்!

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு ஒரு செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மேலும் அதே எண்ணில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ் வந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி யார் என விசாரிக்க அந்த செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது எதிர்முனையிலிருந்து பேசிய ஒருவர், “என்னிடம் நகைகள், பணம் அதிகம் உள்ளது. நான் சொல்வது படி செய்தால் அதை உனக்குத் தருகிறேன்” எனக்கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன அந்த மாணவி தனது தந்தையிடம் சொல்லியுள்ளார்.

பின்னர் தந்தையும் மாணவியும், தல்லாகுளம் காவல்நிலையத்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். மதுரையை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்து விவசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெரும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக போலிஸார் ஒருவர் கூறுகையில், “மதுரை தல்லாகுளம் பகுதியில் ரெஸ்டாரண்ட், டிரேடர்ஸ் மற்றும் செல்போன் கடைகள் நடத்திவரும் 3 இளைஞர்கள், அந்தப் பகுதியில் விடுதியில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளைக் குறி வைத்துப் பிடித்துள்ளனர். செல்போன் கடைக்கு வரும் மாணவிகளின் செல்போன் எண்களை வைத்துக்கொண்டு அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும், செல்போனில் தொடர்ந்து பேசியும் வந்துள்ளனர்.

பின்னர் நன்றாகப் பேசி பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர் நேரில் வரவழைத்து நல்ல உணவுகள் மற்றும் பணம் கொடுத்து ஆடம்பர வாழ்க்கைக்கு அவர்களை ஆசை காட்டியுள்ளனர். நன்றாகப் பழகிய பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்படி தங்களுடன் வரும் பெண்களை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவர்களுக்கு குளிர்பானங்களில் போதை மாத்திரைகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை வைத்து அந்த பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று, அடுத்தடுத்த பெண்களுக்கு குறி வைத்துள்ளனர்.

இதேபோல் விடுதி மாணவிகளுக்கு உணவு கொடுப்பது போல மது கொடுத்து அவர்களுடனும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் ஏராளமான இளம்பெண்களை சிக்கவைத்து அவர்களின் வாழ்கையை சீரழித்துள்ளனர். இந்த தகவலனைத்தும் போலிஸாரின் முதல்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து நாகர்கோயில் காசியின் லீலைகள் அம்பலமான நிலையில் தற்போது மதுரையில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உதவி ஆணையர் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனி பிரிவினர் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அல்லது பாதிக்கப்பட்ட பெண்கள் 8300017920, எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரை பற்றி விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Also Read: “பெண்களை மிரட்டும் காசியின் ஆடியோ - தற்போது வெளியானதன் பின்னணி என்ன?” : போலிஸார் தீவிர விசாரணை!