Tamilnadu

“மாஸ்க் அணிந்தால் அனுமதி.. இடைவெளி அவசியம்” : ஊரடங்குக்குப் பிறகு பேருந்தை இயக்க கட்டுப்பாடுகள் வெளியீடு!

முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் ஏற்றக்கூடாது, பேருந்து கட்டணங்களை மொபைல் செயலி மூலம் பெறும் வசதியை ஊக்கப்படுத்த வேண்டும் என அனைத்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கும், தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் தர்மேர்ந்திர பிரதாப் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு போக்குவரத்து சேவையில் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கும் போக்குவரத்து முதன்மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், குறிப்பிட்டுள்ளதாவது

* தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்.

* 50 சதவிகிதத்துக்கும் குறைவான பயணிகள் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும்.

* பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனி வழியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை தவிர்க்க வேண்டும்.

* ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் பேருந்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* ஒவ்வொரு முறையும் பணிக்குச் செல்லும் முன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். நடத்துநரிடம் கட்டாயம் கிருமி நாசினி இருக்கவேண்டும்.

* பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் ஏற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் ஏற்றக்கூடாது.

* பேருந்தில் பயணிகளிடையே சமூக இடைவெளி இருப்பதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும்.

* பேருந்து கட்டணங்களை பேடிஎம், கூகுள் பே, ஜியோ பே போன்ற செயலிகள் மூலம் பெறும் வசதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

Also Read: புதிய கல்வி கொள்கையின் இறுதி வரைவு தயார்: ஊரடங்கு நேரத்திலும் வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் மோடி அரசு!