MK Stalin
Tamilnadu

"ஊரடங்கு நீட்டிப்பா? நீக்கமா? உடனே அறிவிக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பது. அவ்வாறு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 3-ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனாலும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.

கொரோனா பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய - மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற பரபரப்பையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்.

35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தி.மு.க என்பது மக்கள் அரசாங்கம்; மக்களுக்காக என்றும் துணை நிற்போம்” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! (Video)