Tamilnadu

பல பெண்களைச் சீரழித்த நாகர்கோவில் சுஜிக்கு ஆளுங்கட்சியினருடன் தொடர்பு? - சிபிசிஐடி விசாரணைக்கு கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டாக்டர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வல்லைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபார தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி என்ற சுஜி (26).

இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக உள்ளூர் முதல் வட இந்தியா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களிடம் நண்பராக அறிமுகமாகி, காதல் ரசம் சொட்டும் வகையில் வசனம் பேசி காதலிப்பதாக கூறி அவர்களை நம்ப வைத்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார்.

அதோடு பெண்களுக்குத் தெரியாமலேயே வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அண்மையில் அவரது வலையில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் விழுந்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் காசி.

பணம் கிடைக்காததால் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை தன் நண்பர்களிடம் கொடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதேபோல, பல பெண்களிடம் அவர்களிடம் ஒன்றாக இருந்தபொது எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அந்தப் பெண்களின் செல்போன் எண்களை நண்பர்களுக்குக் கொடுத்து பேச வைத்து தன்னை அவர்களிடமிருந்து சாதுரியமாக விடுவித்துக் கொள்வது இவரது கை வந்த கலையாக இருந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஏழு லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இவரிடம் இழந்துள்ளார். இவரது சுயரூபம் தெரிந்து, பணம் கொடுக்க மறுத்து விலக முற்பட்டபோது அவரது படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதன்படி, கோட்டார் போலிஸார் 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சுஜியின் செல்போன் மற்றும் பல ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தொடர் பாலியல் குற்றச் சம்பவத்தில் ஆளும் கட்சியினருக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுவதால் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் எனவும், மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவு ம்சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே, பல இளம்பெண்களைச் சீரழித்த பொள்ளாச்சி சம்பவத்தைப் போல், நாகர்கோவிலிலும் அரங்கேறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Also Read: 9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பா.ஜ.க தலைவர் : போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறை