Tamilnadu

“கொரோனா விழிப்புணர்வு - தன்னார்வலராக பணியாற்றிய நடிகர் சசிகுமார்” : அதிர்ந்துபோன மதுரை மக்கள்! video

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் தடியடி நடத்தி விரும்பத்தகாத நடவடிக்கையிலும் போலிஸார் ஈடுபடுகின்றனர்.

அதேப்போன்று சில மாவட்டங்களில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றும் நபர்களை போலிஸார் தொடர் ரோந்து, ட்ரோன் கேமரா ஆகியவற்றின் மூலமாகக் கண்காணித்து அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் நடிகர் சசிகுமார் காவல்துறைக்கு உதவியாக ’நானும் ஒருநாள் பணியாற்றுகிறேன்’ என்று காவல்துறை அனுமதியோடு அவர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய சசிகுமார் “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என பேசினார்.

மேலும், இதுதொடர்பாக வெளியான வீடியோவில் பேசிய சசிகுமார், “நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காவல்துறையினர் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் வீட்டிலிருந்து உதவி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read: “ஜோர்டான் நாட்டு பாலைவனத்தில் சிக்கிய நடிகர் பிருத்விராஜ்” - படக்குழுவினர் 58 பேரும் தவிப்பு! #COVID19