Tamilnadu

“கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை” - கேரளாவில் இருந்து நடந்தே வந்தவரா? - அதிர்ச்சி தகவல்!

அரியலூர் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி. கேரளாவில் பணியாற்றிய நாராயணசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அரியலூர் தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 7ஆம் தேதி அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியாத நிலையிலேயே, வார்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மருத்துவமனையிலேயே ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பில் இருக்கவேண்டிய கொரோனா அறிகுறி கொண்ட நபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா எனக் கேள்வி எழுந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நபர் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதால் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து தனது சொந்த ஊரான கடம்பூருக்கு நடந்தே வந்ததாகக் கூறப்படுகிறது.

கொரோனா வார்டில் இருந்த நாராயணசாமி மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “மருமகள் மூலம் மாமியாருக்கு தொற்றிய கொரோனா?” - தூத்துக்குடியில் 71 வயது மூதாட்டி பலியான சோகம்! #Covid19