Tamilnadu

“வாகனங்களை சேதப்படுத்தி வன்முறை - காவல்துறையினருக்கு கட்டுப்பாட்டு தேவை” : மனித உரிமை ஆணையம் அதிரடி!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுகிறது. அதன்படி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதனை சாதகமாக எடுத்துக்கொண்ட போலிஸார் சாலையில் வருபவர்கள் யார் என்று கூட விசாரிக்காமல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதுபோல தாக்குதலால் பல இடங்களில் மருத்துவர்கள், செய்திதாள் விநியோகிப்பவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போலிஸார் அடித்துவிரட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் காவல்துறைக்கு எதிராக மக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்த துவங்கியுள்ளனர்.. இந்நிலையில் பணியில் இருக்கும் போலிஸார் பொதுமக்களை தாக்கக்கூடாது என உயர் அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

ஆனால் போலிஸார் யார் பேச்சையும் கேட்காமல் தங்கள் போக்கிலேயே செயல்படுகின்றனர். நேற்றைய தினம் கூட வட சென்னையில் போலிஸார் 2 பேர் ஓட்டோ ஓட்டுநர் பாபு என்பவரை தாக்கியதில் பலத்தக்காயம் அடைந்து மருத்துவமனையில் பாபு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன், உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் ஆகியோர், தலைமைச் செயலாளருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் காவல்துறை தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “கொரோனா பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனாவை தடுக்க சுகாதாரமான முறையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் விநியோகம் இல்லாமல் சுகாதாரம் என்பது வாய்ப்பே இல்லை என்பதால் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் பணி முடித்து வீடு திரும்பும் முன், குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ளவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு கொரோனா பரவும் அபாயம் நீங்கும் என பரிந்துரைத்துள்ளனர்.

ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ரேஷன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். சிறைகளில் உள்ள கைதிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

அதேநேரத்தில் ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்களின் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடும் காவலர்களைக் கண்டிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக காவல்துறை, சிறைத்துறை, பொது விநியோகத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம் ஆகியன 10 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Also Read: பசியால் தவித்த குடும்பத்தை காப்பாற்ற நினைத்த ஆட்டோ ஓட்டுநர்: இரண்டு கையையும் உடைத்த ‘வெறி’ பிடித்த போலிஸ்