Tamilnadu

லத்தியை வீசும் போலிஸ் - கடைக்கோடி மனிதன்  பாதிக்கப்படக் கூடாது என உயர் நீதிமன்றம் கருத்து!

கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாநில அரசின் 144 தடை உத்தரவு போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, நீதிபதிகள் வினித் கோத்தாரி சுரேஷ்குமார் அமர்வு முன், ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த வழக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் இன்று விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் திருஞானசம்பந்தம் என்பவர் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் ஆஜரானார்.

அதேபோல, அரசினுடைய கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்னும் வீடியோ கால் மூலம் நீதிபதிகளுக்கு பதிலளித்தார். அப்போது, “எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை. இதுவரை ஊரடங்கை மீறியதாக 17,118 பேர் மீது வழக்குப்பதிவு, எஃப்.ஐ.ஆர்.போடப்பட்டுள்ளது. முறையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” எனக் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் வீடியோ கால் மூலம் கேட்டறிந்த நீதிபதிகள் வினித் கோத்தாரி சுரேஷ்குமார் அமர்வு, "நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாலும் நடுநிலையான அணுகுமுறையை கையாளவேண்டும்.

மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பிரிவு 21 கீழ் வாழ்பவர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது. தமிழகத்தில் கடைகோடி சராசரி மனிதன் இதனால் பாதிக்கக்கூடாது." என தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

Also Read: “பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணி” : கொரோனா கண்டறியும் கருவி கண்டுபிடித்து இந்தியப் பெண் அசத்தல்!