Tamilnadu

“ஏழைகளின் கைகளுக்கு இலவசமாக சென்ற சானிடைசர்” : 'ஹேண்ட் சானிடைசர்' தயாரித்து கல்லூரி மாணவர்கள் விநியோகம்!

உலக நாடுகளில் பரவிவந்த கொரோனா இந்தியாவை அச்சுறுத்த துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. அரசின் அறிவுறுத்தலின் படி, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அவர்களால் அதில் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை உள்ளது.

உதாரணமாக கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முக கவசம், சானிடைசர், சோப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்தி இப்பொருட்களை சிலரால் அதிக விலைக்கு விறக்கப்படுகிறது.

இதனால், மக்கள் அதை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்த தட்டுப்பாட்டை போக்க மத்திய மாநில அரசு எடுத்த நடவடிக்கையும் கேள்வி குறியே!

அதுமட்டுமின்றி, வெறும் விலையை மட்டும் நிர்ணயம் செய்த மத்திய அரசு உற்பத்தி அதிகரிப்பு, பதுக்கல் நடவடிக்கையை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளின் கவணம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துளது.

இதனால், சாதாரண மக்களின் கைகளுக்கு, அதிலும் குறிப்பாக கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும், பாதுகாப்பு உபகரணம் சென்ற அடையவில்லை என்பது வேதனைக் குறிய விஷயம்.

இந்நிலையில், இந்த சூழலைக் கருத்தில் கொண்ட கல்லூரி மாணவர்கள், சானிடைசர்களை தயாரித்து இலவசமாக மக்களுக்கு வழங்க முடிவு செய்தனர். அதன்படி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பார்மசி கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்களின் உதவியுடன் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி சானிடைசர்களை தயாரித்து வருகின்றனர்.

ஒருநாளைக்கு 500 லிட்டர் சானிடைசர் கரைசலை தயாரித்து 100 முதல் 50 மில்லி லிட்டர் பாட்டிலில் அடைத்து மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர். கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு வீடுவீடாகச் சென்று மாணவர்கள் இலவசமாக விநியோகித்து வருகின்றனர்.

இன்னும் 10 நாட்களுக்கு தயாரிப்பு பணிகளையும், விநியோகப் பணியையும் செய்ய இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் இந்த முயற்சிக்கு நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “கொரோனா இருந்தாலும் வரிகளை ஆன்லைனில் செலுத்தலாமே?” : உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு இரக்கமின்றி வாதம்!