Tamilnadu

கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்பு : மார்ச் 22ம் தேதி 7 மணி முதல் தமிழகம் முழுவதும் பால் விநியோகம் இல்லை!

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 22-ம் தேதிகாலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேற்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, 22-ம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பேசியதற்கு தனியார் பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமரின் அறிவிப்பை ஏற்று, சுய ஊரடங்கை மேற்கொள்ள நாங்களும் முடிவெடுத்துள்ளோம்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) காலை 7 மணிக்கு மேல் பால் விற்பனை செய்ய மாட்டோம். கொரோனா பாதிப்பைத் தடுக்க எங்களால் ஆன ஒத்துழைப்பை அளிப்போம்.

அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப்பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக தமிழகம் முழுவதும் 21-ந் தேதி சனிக்கிழமையன்று காலை, மாலை என இருவேளைகளில் கூடுதலாக பால் கொள்முதல் செய்து அன்றைய தினம் இரவு கூடுதல் நேரமும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் மேற்கொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: #LIVEUpdate | “கொரோனா அச்சம்: ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவேண்டும்” - மு.க.ஸ்டாலின் கோரிக்கை!