இரா.முத்தரசன்
Tamilnadu

“அதிகாரத்தில் பெண்கள் சமபங்கு பெறும் போதுதான் பாலின சமத்துவம் காண இயலும்”: முத்தரசன் மகளிர் தின வாழ்த்து!

சர்வதேச பெண்கள் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமூக வாழ்வில் ஆண்களை மையப்படுத்தி உடைமை சமூகம் தோன்றிய நாளிலிருந்து பெண்களை அடிமைப்படுத்தும் சமூக அநீதி தொடங்கியது. பெண்கள் ஏடு தொடுவது தீட்டென போதித்து, படிக்கவே கூடாது என்பதை ஒழுக்கவிதியாக உபதேசிக்கப்பட்டது. இந்த இருண்ட வாழ்க்கை சூழலை எதிர்த்துப் போராடிய பெண்கள் ‘ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண்’ உலகறியச் செய்துள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் செல்ல இயலாது என்ற ‘பேதமையை’ விமர்சித்து நாட்டின் உச்சநீதிமன்றம் பாலின சமத்துவத்திற்கு ஆதரவளித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஜனநாயக போராட்டத்தில் பெண்களின் போர்க்குணம் மறுமலர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது.

சுடரொளியாக சாதனைகள் விரியும் நேரத்தில், பெண்களின் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் நாகரிக சமூகத்தை வெட்கித் தலை குனிந்து நிற்க செய்கிறது. மதவெறி, சாதிவெறி கும்பலால் பெண்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். பெண்களின் உழைப்பு இரக்கமின்றி சுரண்டப்படுவதுடன் பல நிலைகளில் அவமதிக்கப்படுகின்றனர்.

அதிகாரத்தில் பெண்கள் சமபங்கு பெறும் போதுதான் பாலின சமத்துவம் காண இயலும். அந்த இலக்கு நோக்கி போராடி வரும் பெண்களோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போராடும் என்பதைத் தெரிவித்து, உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சர்வதேச உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஜனநாயக போராட்டத்தில் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிக்கிறது” : கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து!