Tamilnadu

“CAA ஆதரவு பேரணியில் வன்முறையை தூண்டும் வாசகம்” - பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி சென்னை கமிஷனரிடம் புகார்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்களின் உரிமைக்குரல்கள் ஒலித்து வரும் சமயத்தில் அந்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் போராடுகிறோம் என தம்பட்டம் அடித்துக்கொண்டு பா.ஜ.கவினர் அவ்வப்போது மூக்குடைபட்டும், கலவரங்களைத் தூண்டியும் வருவதைப் பார்க்க முடிகிறது.

அண்மையில் வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் இந்துத்வா குண்டர்கள் பலர் திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்தி போராட்டக்களத்தில் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். இதில் 40க்கும் மேலானோர் உயிரிழந்தும், 200க்கணக்கானோர் படுகாயமுற்று சிகிச்சையும் பெற்றும் வருகின்றனர்.

Also Read: “டெல்லியைத் தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்வா கும்பல் வன்முறை” : இணையசேவை நிறுத்தம் - 144 தடை அமல்!

இதனையடுத்து சென்னையின் ஷாஹீன்பாக் என அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையிலும் கலவரத்தை வெடிக்க வைக்க எச்.ராஜா, கல்யாண் ராமன் போன்ற மதவெறி பிடித்த பா.ஜ.கவினர் முயற்சித்து வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற பாஜகவின் சி.ஏ.ஏ ஆதரவு போராட்டத்தில், வன்முறையைத் தூண்டும் விதமான பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில், “டெல்லி எரிந்தது; அடுத்து சென்னையின் ஷாஹீன்பாக்தானே?” எனக் கேள்வி எழுப்பும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வன்முறையைத் தூண்டும் இவ்விதமான பதாகைகள் பா.ஜ.கவின் பேரணியில் அனுமதிக்கப்பட்டிருந்தது காண்போரை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், சமூகத்தில் பதட்டத்தையும், வன்முறையையும் உருவாக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மெரினா போராட்டக் குழு, டிசம்பர் 3 இயக்கம், தமிழ் மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு ,தேசிய முற்போக்கு தமிழக கழகம் கூட்டாக இணைந்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய முற்போக்கு தமிழக கழகத்தைச் சேர்ந்த சார்லஸ் வெற்றிவேந்தன், “தமிழகத்தில் அமைதியாக நடந்து வரும் போராட்டக் களத்தில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் சட்டத்தை மீறி பா.ஜ.கவினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கலவரம் ஏற்படுமா என அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

பா.ஜ.கவின் சி.ஏ.ஏ ஆதரவு பேரணியில் பங்கேற்றதில் பெரும்பாலானோர் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து பீடா விற்பவர்கள், வட்டி தொழில் செய்பவர்களுமேதான். அவர்கள் இப்படிக் கூறுவது கண்டனத்திற்குரியது. எங்களுக்கு சட்டத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் உண்டு என்பதாலேயே புகாராக அளித்துள்ளோம். இல்லையெனில், சவுகார்பேட்டை பகுதியில் உள்ள அனைவரையும் அவர்கள் பாணியில் வெளியேற்ற முடியும்” எனக் கூறியுள்ளார்.