Tamilnadu

வேலுமணி மீதான ஊழல் வழக்கு: நீதிமன்ற அனுமதியின்றி இறுதி முடிவு எடுக்கக்கூடாது - அரசுக்கு ஐகோர்ட் வார்னிங்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் ஏற்படுத்தல் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.

இதில் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளில், ஆற்று மணல் பயன்படுத்துவதாகக் கூறி எம்-சாண்ட் பயன்படுத்தியதாகவும், தார்ச்சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்தப்படும் தாருக்கு இரண்டு மடங்கு கணக்கு காட்டியது உள்ளிட்ட முறைகேடுகளில் 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கம் இதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அதில், ஒரு அலுவலகத்தின் IP முகவரியை பயன்படுத்தி பல ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரினர்.

இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும் விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் அனுதியில்லாமல் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இறுதி முடிவு எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு நேரடியாக அறிக்கையை தாக்கல் செய்ததை சுட்டிக்காட்டினர்.

மேலும், வழக்கு குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்பியது ஏன்? - ஐகோர்ட் காட்டம்!