Tamilnadu

காதலி மீதான கோபத்தில் போலிஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

சென்னையில், காதலி மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்து காதலி வராததால் போலிஸ் பூத் மீது பெட்ரோல் குண்டை வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை பருவா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துவந்த நிலையில் தினமும் குடித்துவிட்டு தனது காதலிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்தப் பெண் இவரைப் பிரிந்து வேறொரு நபரைக் காதலிக்கப் போவதாக வெங்கடேஷிடம் கூறியுள்ளார். மேலும், வெங்கடேஷுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக வெங்கடேஷுக்கும் அப்பெண்ணிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ள்ளது.

இதனால் கோபமடைந்த வெங்கடேஷ் தனது காதலி மீது பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார். மேலும் பெட்ரோல் குண்டு செய்வதைப் பற்றி யூட்யூபில் பார்த்து கற்றுக்கொண்டு பெட்ரோல் குண்டை தயார் செய்துள்ளார்.

மேலும் தனது காதலியை தேனாம்பேட்டை போலிஸ் பூத் அருகே பேசவேண்டும் என்று அழைத்துள்ளார். வெங்கடேஷ் பெட்ரோல் குண்டை தனது பைக்கில் வைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வராததால் கோபமடைந்த வெங்கடேஷ் அருகிலிருந்த போலிஸ் பூத்தில் பெட்ரோல் குண்டை பற்ற வைத்து தூக்கி வீசிவிட்டு தப்பித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனாம்பேட்டை போலிஸார் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர்.

சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வெங்கடேஷை அவரது வீட்டில் வைத்தே தேனாம்பேட்டை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் தேனாம்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: TNPSC தேர்வு முறைகேட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ‘மேஜிக் பேனா’ : சென்னையில் ஒருவர் கைது!