Tamilnadu

ஹெல்மெட் அணியாத இளைஞரை கட்டையால் தாக்கிய டிராஃபிக் போலிஸ்... சென்னை ஓட்டேரியில் பரபரப்பு!

புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் போலிஸார் பன்மடங்கு அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனால், சாமானிய மக்கள் வெகுவாகவே பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், கட்டுப்படுத்தும் வகையிலும் ஹெல்மெட் கட்டாயம் என்பதை அறிவுறுத்தி போக்குவரத்து போலிஸார் மும்மரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், ஹெல்மெட் அணியாத மக்களிடம் போக்குவரத்து போலிஸார் அராஜக நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், சென்னையின் ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ். அப்போது, அயனாவரத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞர் ஹெல்மெட் அணியாமல் ஓட்டேரி குக்ஸ் சாலை வழியே சென்றிருக்கிறார்.

அப்போது சுரேந்தரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலிஸ் ரமேஷ், அபராதம் விதிக்க முற்பட்டார். இதையடுத்து, சுரேந்தருக்கும் போலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால், ரமேஷ் சுரேந்தரின் தலையில் கட்டையால் தாக்கியதில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் போக்குவரத்து போலிஸான ரமேஷை தாக்க முயற்சித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ஓட்டேரி போலிஸார் காயமடைந்த சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பொதுமக்களிடம் இருந்து எஸ்.ஐ ரமேஷை மீட்டுள்ளனர்.

பின்னர், எஸ்.ஐ. ரமேஷ் மீது சுரேந்தர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞரின் தலையில் டிராஃபிக் போலிஸ் கட்டையால் அடித்தது ஓட்டேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: “உடன்பிறப்புகளுடனான அடுத்த பயணத்துக்காகக் காத்திருக்கிறேன்!” : தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்