Tamilnadu

“TNPSC ஊழல் குறித்து என்னோடு நேருக்கு நேர் பேசத் தயாரா?” - அமைச்சர் ஜெயக்குமாருக்கு அப்பாவு சவால்!

டிஎ.ன்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக தன் மீது அமைச்சர் ஜெயக்குமார் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

இன்று நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளோடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு.

அப்போது அவர் கூறியதாவது, “ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யப்பன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் நான் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி முறைகேட்டில் தி.மு.க தலையீடு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவலைப் பரப்பி இருக்கிறார்.

கைது செய்யப்பட்ட அய்யப்பன் என்பவர் எங்கள் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. எம்.எல்.ஏ என்கிற ரீதியில் நான் பல இடங்களுக்குச் செல்லும்போது பலர் என்னுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அவ்வாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து அமைச்சர் இப்படிச் சொல்வது சரியா?

Appavu Ex MLA

எனது அரசியல் பயணத்தில் நான் தவறை தட்டிக்கேட்பேனே தவிர தவறுக்கு ஒருபோதும் துணை போனது கிடையாது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு பிரச்னையை திசைதிருப்பவே தி.மு.க மீது அமைச்சர் பழி சொல்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் தன்னைப்போல் பிறரையும் நினைக்கக்கூடாது.

அ.தி.மு.க ஆட்சியில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு பல லட்சம் கொடுத்து இடமாறுதல் பெறும் சூழல் இருக்கிறது. இனி இந்த ஆட்சியில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெற்றால் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தான் நடைபெற வேண்டும். அப்போதுதான் தேர்வு நேர்மையாக நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் வீட்டிலும் பணம் எண்ணும் எந்திரம் இருக்கிறது. டி.என்.பி.எஸ் சி ஊழல் குறித்து என்னோடு நேருக்கு நேர் பேச அமைச்சர் தயாரா?” என சவால் விடுத்துள்ளார்.

Also Read: "மாவட்டம்தோறும் ஏஜென்ட்” : M.L.M போல செயல்பட்ட TNPSC முறைகேடு கும்பல் - மேலும் இருவர் கைது!