Tamilnadu

“அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டாய கமிஷன்” : முறைகேடுகளை கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!

தமிழகத்தில் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகள் கடன் வாங்கி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு விற்னைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால் அங்கு விவசாயிகளின் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் முன்கூட்டியே கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கமிஷனாக பெற்றுக்கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாய அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கொள்ளிடம் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகி கூறுகையில், நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மாதிர வேளூர், அகர எலத்தூர், குன்னம் உள்ளிட்ட 42 ஊராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு சாகுபடி செய்து கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்ய வரும்போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.1 சதவீதம் கமிஷன் தொகை கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் விவசாயிகள் கமிஷன் தொகை கொடுத்து விட்டுத்தான் வருகின்றனர்.

குறிப்பாக, நெல் மூட்டை ஒன்று ரூ.780 வீதம் விற்பனை செய்யும்போது ரூ. 40 வீதம் முன்னதாகவே கமிஷன் பெற்றுக் கொள்கின்றனர். ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.40 வீதம் விவசாயிகள் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மிகுந்த துயரமடைகின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி கொள்முதல் நிலையங்களில் கமிஷன் தொகை பெறுவதை உடனடியாக தடுத்து நிறுத்த அ.தி.மு.க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Also Read: “பட்டப்பகலிலேயே பெண்கள் பாதுகாப்பாக நடமாடமுடியாத அவலத்தை ஏற்படுத்தியிருக்கிறது அதிமுக அரசு”-மு.க.ஸ்டாலின்